

சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஷேகு ஷரபாத் (வயது 32) என்ற வாலிபர் வந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடமும் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 689 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
மற்றொரு சம்பவம்...
அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது இஸ்ரத் (27), முகமது முஸ்தபா (28), முகமது யூனுஸ் (22) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 3 பேரிடம் இருந்து ரூ.31 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து, 4 பேரிடமும் இருந்து ரூ.58 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 599 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த ஷேகு ஷரபாத்தை கைது செய்தனர். பிடிபட்ட கேரள வாலிபர்கள் 3 பேரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.