விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றபிறகு சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் ஒரு பார்சல் கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு தங்க சங்கிலி மற்றும் கை வளையம் இருந்தது.

துபாயில் இருந்து அதனை விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த யாரோ, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமானத்தின் கழிவறையில் அந்த பார்சலை வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.

ரூ.19 லட்சம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com