பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு - இந்து அமைப்பு அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பிய பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்துள்ளது.
அமுல்யா
அமுல்யா
Published on

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்று நடந்தது.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அமுல்யா என்ற மாணவி ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோ‌ஷமிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ஒவைசி அந்த பெண்ணிடம் இருந்த மைக்கை பிடிங்கினார். அந்த பெண் கூறியதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவருக்கும், தங்கள் அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார். அதோடு அவரை விழாவுக்கு அழைத்தது அமைப்பாளர்களின் தவறு என்றும் கூறி இருந்தார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்ட அந்த பெண்ணின் வீட்டை இந்து அமைப்பினர் தாக்கினார்கள்.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்ட பெங்களூர் மாணவி அமுல்யாவை கொல்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது.

ஸ்ரீராம சேனா தலைவர் சஞ்சீவ் மாரண்டி இதை தெரிவித்துள்ளார். அவர் பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து பெல்லாரி போலீஸ் சூப்பிரண்டு சி.கே.பாபா கூறியதாவது:-

மாணவி அமுல்யாவை கொல்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஸ்ரீராமசேனா தலைவர் சஞ்சீவ் மராண்டி அறிவித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

ஆனால் எங்களுக்கு யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. நாங்கள் இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிப்போம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com