ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Published on

ஊட்டி:

கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூணன், கோபால கிருஷ்ணன், குன்னூர் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய நிறத்தால் ஆன 30 ஆயிரம் ரோஜாக்களால் பிரமாண்ட இந்தியா கேட் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர ஜல்லிக்கட்டுக்காளை, மயில்,மாம்பலம், சோட்டா பீம், ரங்கோலி ஆகிய மலர் அலங்காரம் சிறப்பாக இருந்தது. தோட்டக் கலைத் துறை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கண்காட்சியில் 40 ஆயிரம் மலர்ச்செடிகளில் பூத்துக்குலுங்கும் மினியச்சர், இருவண்ண மலர்கள் ஆகியவை மெய்மறக்க செய்தது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாளை மாலை (ஞாயிற்றுக்கிழமை) சிறந்த அரங்கம், சிறந்த பூங்கா ஆகியவைகளுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் ரோஜா கண்காட்சியை காண மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் சமவெளிப்பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். ரோஜா கண்காட்சியையொட்டி ஊட்டி நகரம் களை கட்டியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com