

சென்னை:
சென்னை வடக்கு மண்டல போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜெயராமன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கூடுதல் கமிஷனர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளியில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இந்த தொகுதியில் மொத்தம் 7 போலீஸ் நிலையங்கள் வருகின்றன. அதில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்த 7 போலீஸ் நிலையங்களிலும் 12 ரோந்து வாகனங்கள் இருக்கின்றன. மேலும் கூடுதலாக 12 ரோந்து வாகனங்கள் என மொத்தம் 24 வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கருதி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகிறோம். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் முடியும் வரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.