

கடந்த ஆண்டு எம்எஸ் டோனிக்கு மிகவும் சிறப்பானதாக இல்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டியிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
டோனியின் ஆட்டத்திறன் குறைந்து வரும் நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் அவரது இடத்தை பிடிக்க தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும், ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குமார் சங்ககரா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும், அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது. அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியது. அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.