

சேலம்:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நித்தேஷ்பகத் (வயது18). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு ரிக் வண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சேலம் கிச்சிப்பாளையம் கண்ணம்பூர் மாரியம்மன் கோவில் பகுதியில் அந்த ரிக் வண்டி மூலம் ஆழ் துளை கிணறு அமைக்கும் பணியில் நித்தேஷ் பகத் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பாசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உறவினர்களுக்கும் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை கேட்டு கதறி அழுதனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சேலத்திற்கு புறப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.