

திருச்சி:
குழந்தை ஆழ்துளை கிணற்றில் 25-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தவறி விழுந்துள்ளார். அப்போது முதல் மீட்புப்பணிகள் எந்தவித தொய்வும் இன்றி தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளும் தன்னார்வத்துடன் வந்து குழந்தையை மீட்பதில் அக்கறை காட்டி அதற்கான பணிகளை துரிதப்படுத்தி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த மீட்புப் பணியில் மிகவும் திறமை வாய்ந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களான மதுரை மணிகண்டன், நாமக்கல் டேனியல், கோவை ஸ்ரீதர், நாமக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ், புதுக்கோட்டை வீரமணி மற்றும் தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆகியோர் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
எனவே பொதுமக்கள் குழந்தை மீட்பதில் தொடர்ந்து பிரார்த்தனை மட்டும் மேற்கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். ரிக் போன்ற எந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
வேகம், கவனம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதிநவீன எந்திரம் கொண்டு ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டும் பணி கடினமான பாறைகள் காரணமாக சற்றே தாமதமானது. அது சரிசெய்யப்பட்டு விரைவில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நிறைவடைந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.