

திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பாலம்மாள் காலனியை சேர்ந்தவர் தயாநிதி. ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது 2-வது மனைவி வனஜா (வயது 63), ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு அருண்மொழி தேவி (32) என்ற மகள் உள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு பாலம்மாள் காலனியில் உள்ள 3,290 சதுர அடி வீட்டை தயாநிதி தனது 2-வது மனைவி வனஜா பெயருக்கு உயில் எழுதி வைத்தார்.
அதன்பிறகு கடந்த 2013-ம் ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் தயாநிதி இறந்துவிட்டார். கணவன் இறந்த பிறகு அந்த வீட்டை வனஜா தனது மகள் அருண்மொழிதேவிக்கு தானமாக எழுதி வைத்தார்.
அதனை அறிந்த தயாநிதியின் முதல் மனைவி ராஜகுமாரி, தனக்குத்தான் வீடு சொந்தம் என்று கூறி, வீட்டை காலி செய்யும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதே வார்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பாரத் என்பவர் வனஜாவிடம், வீட்டை எனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு, வழக்கை முடித்து உன்னிடம் வீட்டை ஒப்படைக்கிறேன் என கூறியுள்ளார்.
அதன்பேரில் கடந்த 5.9.17-ந் தேதி பாரத் பெயருக்கு வீடு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு வாரம் கழித்து வனஜாவை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, அவசர அவசரமாக பாரத் வீட்டை இடித்து புதியதாக கட்டிட வேலையை தொடங்கினார். மேலும் அருகில் உள்ளவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்து வீட்டை விலைக்கு வாங்கிவிட்டேன் என கூறிஉள்ளார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த வனஜா, அருண்மொழிதேவி ஆகிய இருவரும் தங்களது வீட்டை மீட்டுத்தரும்படி கலெக்டர் மற்றும் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தற்போது அந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் வாழ்ந்து வந்த வீட்டுக்கு நேற்று மதியம் வனஜா வந்தார். அப்போது திடீரென வீட்டு முன்பு நின்று கொண்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அருண்மொழிதேவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் கவுன்சிலர் பாரத்தை விசாரணைக்கு அழைக்க போலீசார் சென்றனர். அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய பாரத்தை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அவரது நண்பர், உறவினர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வனஜா தற்கொலை செய்வதற்கு முன்பு முதல் அமைச்சர் தனிப்பிரிவு, வேலூர் கலெக்டர், திருப்பத்தூர் சப்-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வேலூர் நில அபகரிப்பு பிரிவு உள்பட 9 பேருக்கு பதிவு தபாலில் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த தபாலில் வனஜா என்ன எழுதியுள்ளார்? என்ற விவரம் இன்று தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews