சாக்குப்பையில் உயிருடன் இருந்த ஆண் குழந்தை- அரசு மருத்துவமனையில் ஒப்படைப்பு

பூதலூர் அருகே சாக்குப்பையில், உயிருடன் ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
சாக்குப்பையில் கிடந்த ஆண் குழந்தை
சாக்குப்பையில் கிடந்த ஆண் குழந்தை
Published on

திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வில்வராயன்பட்டி ஆதிதிராவிடர் தெரு புதுக்காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நேற்று காலை ஒரு சாக்கு கேட்பாரற்று கிடந்தது. அந்த சாக்குப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அப்போது சாக்குப்பையில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்தது. உடனே அந்த தெருவில் வசிக்கும் ராஜாங்கம்-நந்தினி தம்பதியினர் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து தஞ்சையில் உள்ள சைல்டு லைன் அமைப்புக்கு(குழந்தைகள் உதவி மையம்) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினர் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பெற்று தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

அந்த குழந்தையின் தாய் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ஏன் குழந்தையை சாக்குப்பையில் வைத்து போட்டு சென்றார்? போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. குழந்தை இல்லை என ஏங்குவோர் பலர் உள்ள நிலையில் பெற்றெடுத்த குழந்தையை அதுவும் ஆண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீதியில் போட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com