

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் நம்பம்பட்டி, கவரப்பட்டி மற்றும் கோட்டைக்காரன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ளவர்களுக்கு இதுவரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீரை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சேமித்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக போதிய அளவு குடிநீர் வராததால் பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி பொதுமக்கள் நேற்று காலை விராலிமலை-மணப்பாறை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டி சின்னம்மாள்(60) என்பவர் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.
விராலிமலை ஒன்றியம் நம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த சின்னம்மாளுக்குஅருகில் இருப்பவர்கள் உதவியதை படத்தில் காணலாம்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பதாக கூறி சாலைமறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிதண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.