

உடுமலை:
உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு, பல்லாயிரக்கணக்கான வீடுகள் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. நகராட்சியில் வருவாய் மற்றும் நிதி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவுகளில், அலுவலர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். அவ்வகையில் நகராட்சியின் செயல்பாடு, திட்டங்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்டவை அதற்கான இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவற்றில் உயரதிகாரிகளின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற அலுவலர்களின் செல்போன் எண் விபரங்கள் கிடையாது. இதனால் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடிவதில்லை.
எனவே அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து பணியாளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இணையதளத்தில், ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் வாயிலாக ஒவ்வொருவரும் தங்களது பகுதியின் அதிகாரி மற்றும் பணியாளர்களை தொடர்பு கொண்டு எளிதில் குறைகளை தெரிவிக்க முடியும் என்றனர்.