தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஏராளமானோர் மனு

ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நிமனத்திற்கு ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.
தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஏராளமானோர் மனு
Published on

சிவகங்கை:

9அம்ச கோரிக்கை தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை, இதனால் அரசு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணிக்கு நியமிக்க முடிவு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பகல் 2 மணி வரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஆசிரியர் பணி வேண்டி விண்ணப்பங்களை கொடுத்தனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 1,115-ம், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவைகளில் 7 ஆயிரத்து 586 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் நேற்று முன்தினம் 5ஆயிரத்து 355 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் இவர்களில் நேற்று 119 பேர் மட்டும் பணிக்கு வந்து விட்டனர். பணிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 28-ந் தேதி பணிக்கு வரவில்லை என்றால் பெற்றொர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7ஆயிரத்து 500 வழங்கப்படும். இதையடுத்து தற்போது ஏராளமானவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக தங்களின் விண்ணப்ப மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com