

பெங்களூரு:
கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் ’நம்ம மெட்ரோ’ அறிவிப்பு பெயர்பலகைகளில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகள் இடம்பெற்றுள்ளன. ரெயில்களிலும் அவசரகால தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் நாகப்ஹரனா நேற்று வீடியோ கான்பிரன் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது நாகப்ஹரானா கூறுகையில், ’பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்தி பெயர்பலகைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
மெட்ரோ நிர்வாகம் இந்தியில் உள்ள பல பெயர்பலகைகளை நீக்கியுள்ளது. ஆனாலும், பல்வேறு பெயர்பலகைகள் இன்னும் இந்தியில் உள்ளன. அவசரகால பெயர்பலகைகளில் கன்னடம், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி இன்னும் உள்ளது.
பெங்களூரு மெட்ரோ சேவையை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் பயன்படுத்துவதால் 22 இந்திய மொழிகளையும் பெயர்பலகையில் சேர்க்கவேண்டும். அப்படி இல்லை என்றால் இந்தியை பெயர் பலகையில் இருந்து நீக்கவேண்டும். கன்னடமும்,
ஆங்கிலமும் மட்டுமே பெங்களூரு மெட்ரோவில் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, மெட்ரோ ரெயில்கள், நிலையங்களில் அவசரகால பெயர்பலகைகளில் உள்ள இந்தியை நீக்கி நவம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிப்பதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.