

மும்பை:
ரிலையன்ஸ் ஜியோவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 4ஜி வோல்ட்இ மொபைல் போன் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரூ.500 விலையில் நிர்ணயம் செய்யப்படவுள்ள புதிய பீச்சர் போன் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 21-ந்தேதி நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் புதிய மொபைல் போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மொபைல் போனுடன் அட்டகாச விலையில் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்படலாம். ஏப்ரல் 11-ந்தேதி அறிவிக்கப்பட்ட ஜியோ தண் தணா தண் சலுகை நிறைவு பெற இருப்பதைத் தொடர்ந்து புதிய சலுகைகள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய 2ஜி வாடிக்கையாளர்களை நேரடியாக 4ஜி சேவைக்கு மாற்றும் விதமாக ஜியோ தனது பீச்சர் போனினை ரூ.500க்கு விற்பனை செய்யும் என கூறப்படுகிறது. ஜியோ சேவைகளுடன் 4ஜி வோல்ட்இ பீச்சர் போன்களை இணைத்து 4ஜி சந்தையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ 4ஜி சேவைகளில் ஏப்ரல் 2017 வரை சுமார் 11.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடு மேலும் ஒரு பலத்த போட்டியை டெலிகாம் சந்தையில் ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய வெளியீடு முன்னணி நிறுவனங்களின் பெரும்பாலான பிரீபெயிட் வாடிக்கையாளர்களை இழக்கச் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது, மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்டவை வோல்ட்இ நெட்வொர்க்கில் வோல்ட்இ சேவையை சோதனை செய்து வருகின்றன.