

செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம், சாமி நகரில் பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்திற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இங்கு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முகமது ஆசாத், அவரது நண்பர் அஷ்ரப் அலி என்கிற டிங்கு (வயது 22) உள்பட ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு தங்கியிருந்த அறையில் அஷ்ரப்அலிக்கும், முகமது ஆஷாத்துக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது ஆஷாத் கத்தியால் அஷ்ரப் அலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆஷாத்தை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்ற போது பக்கத்து வீட்டை சேர்ந்த நண்பரான அஷ்ரப் அலியை வேலைக்காக இங்கு அழைத்து வந்தேன். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம்.
நேற்று இரவு மது போதையில் அஷ்ரப் அலி இருந்தான். அப்போது அவனது செல்போனுக்கு சொந்த ஊரில் உள்ள எனது மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது.
சந்தேகம் அடைந்த நான் செல்போனை பார்த்த போது எனது மனைவியுடன் அஷ்ரப் அலி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. இது பற்றி அஷ்ரப் அலியிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டது.
மேலும் அவன், எனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை சொந்த ஊரில் அனைவரிடமும் தெரிவித்து விடுவேன் எனவும், என்னையும் கொலை செய்வேன் என்றும் மிரட்டினான்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் அஷ்ரப் அலியின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து கொன்றேன். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews