

செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபாகரன். கட்டிட காண்டிராக்டர்.
இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அயனாவரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.
நேற்று இரவு அவர் திரும்பி சென்ற போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 29 பவுன் நகை, ரூ.19 ஆயிரம் ரொக்கம், கிலோ ½ வெள்ளிப்பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.
கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். கொத்தனார். நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
இதே போல் சதுரங்கபட்டினம் பஜாரில் 3 கடைகள் உடைக்கப்பட்டு ரூ.19 ஆயிரம் கொள்ளை போய் உள்ளது.
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி ராஜேஸ்வரி. நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் ராஜேஸ்வரி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து தப்பிச் சென்று விட்டனர்.