அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவிற்குள் 2019-ம் ஆண்டில் சட்டவிரோதமாக அகதிகளாக நுழையும் முயற்சியில் 810 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை
Published on

நியூயார்க்:  

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல்சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் நுழைகின்றனர்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் அகதிகளை மெக்சிகோ எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி தடுப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். 

ஆனாலும் அகதிகள் உயிரை பணையம் வைத்து ஆபத்தான ஆறுகள், மிகுந்த வெப்பமான பாலைவன நிலப்பரப்பு என பல்வேறு தடைகளை கடந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் அகதிகள் பலர் தோல்வியடைந்து தங்கள் உயிர்களையும் இழந்துள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்காவுக்குள் 2019-ம் ஆண்டு அகதிகளாக நுழைய முயன்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை உலக அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பாலைவனம், ஆறுகள் என பல்வேறு வழித்தடங்கள் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக நுழையும் முயற்சியில் 2019-ம் ஆண்டு 810 பேர் உயிரிழந்துள்ளனர்.       

அதேபோல், 2014 முதல் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளதாக உலக அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com