

சென்னை:
தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இன்றும், நாளையும் நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமாண்டோ உள்ளிட்ட அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அசாதாரண சூழ்நிலைகளில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவு தற்போது திடீரென வெளியாகியுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரு மூத்த அரசியல் தலைவர்களில் உடல்நிலையுடனும், தமிழகத்தில் ஆட்சி கலைப்பா? என்ற கேள்விக்குறியுடனும் இந்த தகவல் தொடர்புப்படுத்தப்பட்டு சில விவாதங்கள் எழுந்தன.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் இன்று மாலை அளித்த விளக்கத்தில், இது வழக்கமான நடவடிக்கைதான். டி.ஜி.பி உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களை கையாள, சிறப்பு படையினர் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அந்த பணிகள் முடிந்ததால் முகாமுக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். வேறு எந்த காரணமும் இல்லை என தெரியவந்துள்ளது.