

புதுடெல்லி:
டெல்லியில் 2017-18ஆம் நிதியாண்டின் 2-வது இருமாத நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் (ரெப்போ) ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. ரெப்போ 6.25 சதவீதமாக நீடிக்கும்.
இதேபோல் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ) 6 சதவீதமாக நீடிக்கும். எஸ்.எல்.ஆர். விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 20 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அறிவித்துள்ளார்.
தற்காலிக காரணிகளால் 2016 நவம்பர் மாதம் முதல் பணவீக்கம் குறைந்தது. விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய வழியாகும். சமீபத்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி தரவு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய பொருளாதார சரிவை காட்டுகிறது. அடிப்படை காரணிகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மந்தநிலை அதிகரித்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.