பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்: அஸ்வின் கருத்து தெரிவிக்க மறுப்பு

ரவிசாஸ்திரி பயிற்சியளார் நியமனம் தொடர்பாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்: அஸ்வின் கருத்து தெரிவிக்க மறுப்பு
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். கும்பளே இடத்துக்கு அவர் தேர்வாகி இருக்கிறார். கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்பளே பயிற்சியாளர் பதவியை விட்டு விலகினார்.

இந்த நிலையில் ரவிசாஸ்திரி நியமனம் தொடர்பாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரோ அல்லது புதிய உதவியாளர்களின் நியமனங்கள் எனது அதிகார எல்லைக்கு உட்பட்டு வரவில்லை. எனவே அதுகுறித்து நான் கருத்து தெரிவிப்பது சரியானதல்ல.

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

விளையாட்டில் யாரும் தோற்கலாம். யாரும் ஜெயிக்கலாம். ஆப்கானிஸ்தான் அணி கூட யாரையும் ஒருநாள் தோற்கடிக்கலாம்.

இவ்வாறு அஸ்வின் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கும்பளேயின் தீவிர ஆதரவாளர் அஸ்வின் ஆவார். சீனியர் வீரர்கள் அவருக்கு எதிராக இருந்த போது அவர் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். இதன் காரணமாகவே ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. வருகிந 26-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் 300 விக்கெட்டை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 25 விக்கெட் தேவை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com