ரேலியா அணை நீர்மட்டம் 37 அடியாக உயர்வு- பொதுமக்கள் மகிழ்ச்சி

குன்னூர் அருகே நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் ரேலியா அணையின் நீர்மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ரேலியா அணை
ரேலியா அணை
Published on

குன்னூர்:

குன்னூர் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணை குன்னுரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்துமி என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 43.7 அடி ஆகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் குன்னூர் பகுதியில் பருவமழை சரியான முறையில் பெய்யவில்லை. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும், கடந்த ஜூலை மாதத்தில் ரேலியா அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது. இதனால் குன்னூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேலியா அணை நீர்பிடிப்பு பகுதியான மைனலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேலும் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.

28 அடியாக இருந்த ரேலியா அணையின் நீர்மட்டம் தற்போது 37 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் ரேலியா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரேலியா அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குன்னூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com