

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்தது.
மேற்கண்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லாத நிலையில், அவையை நடத்த ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் மறுத்தன.
இந்நிலையில், விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பாராளுமன்றம் கூடியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், மக்களவையை பகல் 12 மணி வரையும் மாநிலங்களவையை 2 மணி வரையும் ஒத்திவைத்து சபாநாயகர்கள் உத்தரவிட்டனர்.
மக்களவையில் 12 மணிக்கு பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.