

வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது.
உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு சமாதானம் செய்தார்.
ஆனால், மதியம் அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் உறுப்பினர்களின் அமளி ஓயவில்லை. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.