

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 4வது நாளான இன்று, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகியோர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். ஆனால் எம்பிக்கள் கேட்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘என் பொறுமையை சோதிக்க வேண்டாம். இப்படி செய்தால், நான் உங்கள் பெயர்களை குறிப்பிட்டு, இன்று நாள் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்வதற்கு 255வது விதியை பயன்படுத்த நேரிடும்’ என எச்சரித்தார்.
ஆனாலும் உறுப்பினர்கள், அமைதி அடையவில்லை. இதையடுத்து, முழக்கம் எழுப்பிய 3 எம்பிக்களையும் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் அறிவித்தார். அவர்கள் உடனடியாக அவையைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அவை நடவடிக்கையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுவதற்கு, மாநிலங்களவையில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டுகின்றன. எனவே விவாதத்தின்போது விவசாயிகள் போராட்டம் குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சினைகளை எழுப்ப முடியும்.