சசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும்- ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
சசிகலா
சசிகலா
Published on

சென்னை:

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார்.

அவரது 4 ஆண்டு தண்டனை வருகிற ஜனவரி 27-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆனாலும் அவர் நன்னடத்தை அடிப்படையில் இந்த மாத இறுதியில் விடுதலையாகி விடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்னடத்தை விதி அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கைதி அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் சிசிகலா மற்றும் அவருடன் சிறையில் இருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகிய யாரும் இதுவரை அப்படி விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது.

இதுபற்றி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினால்தான் அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய முடியும். இதற்காக கர்நாடகா சிறைத்துறையில் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். கர்நாடகா சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க இதுவரை யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி விட்டனர்.

கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து கைதிகள் யாரையும் பார்க்க முடியாத நிலை உள்ளது.

எங்களை பொறுத்தவரை இம்மாத இறுதியில் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்பு உள்ளது.

இதுபற்றி சிறைத்துறையினர், இம்மாத இறுதியில் தகவல் கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

சசிகலாவுக்கான அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை செலுத்துகிறீர்களா? என்று கேட்டால், உடனே 1 மணி நேரத்தில் பணத்தை செலுத்தி விடுவோம்.

எனவே இம்மாத இறுதியில் சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com