சத்தியமங்கலம் வன பகுதியில் 3 மணி நேரம் பெய்த சாரல் மழை

சத்தியமங்கலம் வன பகுதியில் 3 மணி நேரம் பெய்த சாரல் மழையால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சத்தியமங்கலம்:

தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, எலந்தகுட்டை மேடு, பெருந்துறை, பவானி, கோபி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டம் முழுவதும் மழை மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்தது. அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை சத்தியமங்கலம் புளியங்கோம்பை, ஒட்ட குட்டை, சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன்நகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் 3 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலை பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

தங்களது குழந்தைகளை பெற்றோர் குடைகள் பிடித்தபடி பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும் பல்வேறு அலுவலகங்களுக்கு வேலைக்கு போவோர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலம் வனப்பகுதிகளான திம்பம், தலமலை, ஆசனூர், மாவநத்தம், அரேப்பாளையம், தாளவாடி, புலியாடா, தொட்டகாஜனூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் குளிர் ஏற்பட்டது.

சாரல் மழையுடன் பனிப்பொழிவும் காணப்பட்டது. இதனால் திம்பம்-ஆசனூர் மலைப்பாதையில் (தமிழக-கர்நாடகா சாலையில்) வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்டப்படி சென்றன. ரோடு முழுவதும் வெண்புகை போல் பனி படர்ந்திருந்தது. இதை காண மிகவும் ரம்மியமாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com