

புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறன்கிய சுமித்(9), மெக்கல்லம்(1) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 10 ரன்களுக்குள் 2 குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர். ரெய்னா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். முதலில் நிதானமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பின்னர் அதிரடி காட்டினார். இதனால் குஜராத் அணியின் ரன் வேகம் கிடுகிடுவென உயர்ந்தது.
குஜராத் அணி 5.2 ஓவர்களில் 50 ரன்களையும், 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அதிரடியாக விளையாடி வந்த ரெய்னா எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 43 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அதில் 4 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. பின்ச் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய ஜடேஜா 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணியில் ரபாடா, கம்மிங் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.