பயணிகள் இங்கே செல்பி எடுக்கலாம் - ரெயில் நிலையங்களில் வருகிறது புதிய வசதிகள்

தனியார் உதவியுடன் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் திட்டம் உருவாகி வரும் நிலையில், செல்பி எடுப்பதற்கென தனி இடங்கள் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட உள்ளன. #IndianRailway
பயணிகள் இங்கே செல்பி எடுக்கலாம் - ரெயில் நிலையங்களில் வருகிறது புதிய வசதிகள்
Published on

புதுடெல்லி:

இந்திய ரெயில் நிலைய மேம்பாட்டுக்கழகம் தனியார் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுமார் 600 ரெயில் நிலையங்களை தேர்வு செய்து அங்கு மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 70 ரெயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே, மும்பை, நாக்பூர், லக்னோ, வாரணாசி, ஜெய்பூர், டெல்லி மற்றும் மைசூர் ஆகிய ரெயில் நிலையங்கள் முதற்கட்ட பட்டியலில் அடங்கியுள்ளன. பயணிகளுக்கு நவீன மேம்பட்ட வசதிகளை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான வரைவு திட்டங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு லிப்ட், எஸ்கலேட்டர், சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் முக்கிய அம்சங்களாக ஏற்படுத்தப்பட உள்ளது. மண்டல ரெயில்வே மேலாளார்கள் கட்டுமானக் கலை நிபுணர்களை நியமித்து நவீன வசதிகளை கொண்டதாக ரெயில் நிலையங்களை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கட்டுமானம், பார்கிங் வசதி, துருபிடிக்காத இரும்பு குப்படித்தொட்டி, குப்பைகளை கொட்டுவதற்கான தனி இடம் ஆகியவை ஏற்படுத்தப்படும். எல்.இ.டி விளக்குகள், மொபைல் சார்ஜிங் வசதிகள், செல்பி எடுக்க தனி இடம், கூட்ட அரங்கு, நவீன சமையல் கூடங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. #IndianRailway #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com