

புதுடெல்லி:
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக புரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கான டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குத்தகையை வழங்குவதற்காக பினாமி கம்பெனி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை லாலு பிரசாத் குடும்பத்தினர் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு சொந்தமான 12 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி லாலு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் அக்டோபர் 4-ம்தேதி அவரது மகன் தேஜஸ்வி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.