

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் அனல் மின்நிலைய கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உ.பி.யில் கொதிகலன் விபத்து ஏற்பட்ட ரேபரேலிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட அனல்மின் நிலைய தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், விபத்து நடந்த அனல் மின்நிலையத்துக்கு நேரில் சென்றேன். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த விபத்து கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது என அவர்கள் கூறினர். எனவே இந்த விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு மாநில அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.