

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இங்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மற்ற மாநிலங்களில் இருந்து முக்கிய அதிகாரிகள் தமிழகம் வந்து அம்மா உணவகம் செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். தங்கள் மாநிலங்களிலும் விரைவில் அம்மா உணவகம் போல் மலிவு விலை உணவகம் செயல்பட தொடங்கும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மலிவு விலை உணவகமான இந்திரா உணவகம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, இந்திரா உணவகத்தை அறிமுகம் செய்து வைத்தார். உணவகத்தில் உணவு தயாராகும் விதம், பரிமாறும் இடங்கள் உள்பட அனைத்தையும் சுற்றிப் பார்த்தார். அதன்பின்னர், அங்கு தயாரிக்கப்பட்ட
உணவு வகைகளை ஒரு தட்டில் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தார்.
இந்திரா உணவகத்தில் காலை உணவு 5 ரூபாய்க்கும், மதியம் மற்றும் இரவு உணவு 10 ரூபாய்க்கும் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ’’இந்திரா உணவகத்தில் வரிசையில் நின்று சாப்பிடுபவர்களில் பா.ஜ.க.வினர் யாராவது உள்ளனரா?’’ என கேள்வி எழுப்பினார்.