

பத்மாவத் பட விவகாரம் தொடர்பாக அரியானாவில் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய கர்னி சேவா அமைப்பினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் பத்மாவத் படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்னி சேவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பள்ளி பேருந்தையும் சரமாரியாக தாக்கினர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். கர்னி சேவா அமைப்பினரின் தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய கர்னி சேவா அமைப்பினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.