

டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் ஃபுயூடபா மாவட்டத்தில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையம், 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது சேதமடைந்தது. கதிரியக்க தன்மைமிக்க தண்ணீர் கசிந்து கடலில் கலந்தது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அணு உலையை சுத்தம் செய்யும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அணு உலையில் இருந்து எடுக்கப்படும் கதிரியக்க கழிவுகளை பசிபிக் பெருங்கடலில் கலக்க வைக்கப்போவதாக அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அணு உலைகளில் இருந்து வெளிவரும் வெப்பத்தை கட்டுபடுத்தி குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் நீர் வெளியே வரும் போது அதில் கதிரியக்க கழிவுகள் கலந்திருக்கின்றன. இச்சீரமைப்பின் போது சுமார் 8 இலட்சம் டன் கதிரியக்க கழிவுகளை கடலில் கலக்க வைக்க உள்ளதாக, சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சிறிதளவே கதிரியக்கம் இருப்பதால் அது கடல் நீரில் கலந்து வீரியம் குறைந்து விடும். அதனால் உயிரனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என இந்த அறிவிப்பை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.