வெள்ளையனே வெளியேறு நினைவு தினம்: ஜனாதிபதி மாளிகையில் தியாகிகளுக்கு கவுரவம்

மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77-வது ஆண்டு நினைவு தினமான இன்று ஜனாதிபதி மாளிகையில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை குடியரசு தலைவர் வெஙகையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிற்கும் காட்சி
துணை குடியரசு தலைவர் வெஙகையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிற்கும் காட்சி
Published on

புதுடெல்லி:

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-ம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும். மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இவ்வியக்கம்  ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. 

வெள்ளையர் அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. 8-8-1942 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து 8-8-1942 அன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி ”செய் அல்லது செத்து மடி” என்று முழங்கி ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கடுத்த நாள் ஆகஸ்ட் 9 1942 இல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை வெள்ளையர் அரசு சிறைப்பிடித்தது. இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது. 

இந்நிலையில், மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77-வது ஆண்டு நினைவு தினமான இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,  பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், தியாகிகளை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்வித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com