

பாக்தாத்:
அமெரிக்கா- ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது அமெரிக்கா உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையத்தில், அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசிம் சோலிமானி, கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
‘அமெரிக்க குடிமக்கள் முடிந்த வரை விமானத்தில் செல்ல வேண்டும். அது முடியாதபட்சத்தில், தரை மார்க்கமாக மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.