பஞ்சாப்பில் துணிகரம் - பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு

பஞ்சாப்பில் வசித்து வரும் பாப் பாடகர் பர்மிஷ் வர்மாவை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பஞ்சாப்பில் துணிகரம் - பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக அமரீந்தர் சிங் பதவி வகித்து வருகிறார்.

பஞ்சாப்பின் பிரபல பாப் பாடகராக இருந்து வருபவர் பர்மிஷ் வர்மா, இவர் தனது நண்பர் குல்வந்த் சிங்குடன் மொஹாலியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். அதன்பின்னர் அவர்கள் நள்ளிரவில் காரில் வீடு திரும்பினர்.

அப்போது ஒரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பர்மிஷ் வர்மா வந்த காரை வழிமறித்தனர். காரில் இருந்த நபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் பர்மிஷ் வர்மாவை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த திடீர் தாக்குதலில் பாடகரின் காலில் குண்டு பாய்ந்தது. மேலும், பர்மிஷுடன் வந்த அவரது நண்பரும் காயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பாடகர் பர்மிஷ் வர்மா மற்றும் அவரது நண்பரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடுக்கு பொறுப்பேற்பதாக பஞ்சாப்பின் நிழல் உலக தாதா தில்ப்ரீத் சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com