

சண்டிகர்:
காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிற பஞ்சாப் மாநிலத்தில் பி.பி.எஸ்.சி. என்னும் பஞ்சாப் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி, பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு பணி நியமனம் நடந்தது.
37 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்க தொழில்நுட்பத்துறை மந்திரி சரண்ஜித் சிங் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில், பாட்டியாலா நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு இடத்துக்கு 2 பேர் போட்டி போட்டனர். இருவரும் சம தகுதி படைத்தவர்கள்.
இதில் தீர்வு காண்பதற்கு ‘டாஸ்’ என்னும் பூவா, தலையா முறையை பின்பற்றி மந்திரி சரண்ஜித் சிங் நாணயத்தை சுண்டினார். இது டெலிவிஷன் சேனல்களில் ஒளிபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஆனால் தனது செயலை மந்திரி சரண்ஜித் சிங் நியாயப்படுத்தி உள்ளார். “முந்தைய பாரதீய ஜனதா, சிரோமணி அகாலி தள கூட்டணி ஆட்சியில் பணி நியமனத்தில் லஞ்சம் தாண்டவம் ஆடியது. நான் அதை ஒழித்து உள்ளேன்” என்று குறிப்பிட்டார்.