காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. #PulwamaAttack #AirTravel #JammuKashmir
Published on

புதுடெல்லி:

காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி சாலை வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (துணை ராணுவம்) மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதாவது விடுமுறைக்கு செல்லும்போதும், பணிக்கு திரும்பும் போதும் ஜம்மு-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி இடையே வர்த்தக விமானங்களில் இருவழி போக்குவரத்தை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான உரிமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். பின்னர் அந்த கட்டணத்தை தங்கள் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுமார் 7.8 லட்சம் வீரர்கள் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது.  #PulwamaAttack #AirTravel #JammuKashmir

X

Maalai Malar
www.maalaimalar.com