

அ.தி.மு.க. அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரட்டை இலைக்கு உரிமை உள்ளவர் சசிகலா மட்டும்தான். அந்த சின்னம் வேறு நபர்களிடம் போக சட்டத்தில் இடம் இல்லை.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் 70 சதவீதம் அ.தி.மு.க. தொண்டர்கள் தினகரன் பக்கம் தான் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் வெறும் 0.6 சதவீதம் பேர் தான் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் இப்போது காணாமல் போய் விட்டார். அவர் பா.ஜனதாவில் சேர போகிறார். அதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் பழனிசாமி, பன்னீர்செல்வம் கையில் இல்லை. எல்லாமே டெல்லியில் உள்ளது.
மு.க.ஸ்டாலின் பேசியே வீணடித்து வருகிறார். அவர் இடத்தில் கருணாநிதியோ, மு.க. அழகிரியோ இருந்திருந்தால் இந்த ஆட்சி எப்போதோ முடிந்திருக்கும். கருணாநிதிக்கு மட்டும் சுயநினைவு இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருப்பார்.
டெங்குவால் தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு கொசு யாரை கடிக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட 30 பேரை (தமிழக அமைச்சர்களை) கடித்தால் போதும். தமிழகத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.