ஓட்டலில் இளம் ஜோடி தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா- படுக்கைக்கு எதிரே வைத்திருந்தது கண்டுபிடிப்பு

போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர்.இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
ஓட்டல் அறைகளில் வைக்கப்பட்டிருந்த கேமரா, போலீசார் சோதனை நடத்திய காட்சி.
ஓட்டல் அறைகளில் வைக்கப்பட்டிருந்த கேமரா, போலீசார் சோதனை நடத்திய காட்சி.
Published on

அழகான கடற்கரையை கொண்ட புதுச்சேரி சுற்றுலாவுக்கு பெயர் போனது. வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலாவுக்கு வருவது வழக்கம்.

அவர்கள் ஓட்டலில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள்.

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதிக்கு அதே ஊரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று சென்றுள்ளது. கடந்த வாரம் காலை 11 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர்.

அப்போது ஓட்டல் அறையில் சிவப்பு நிற விளக்கு ஒன்று மின்னி மறைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

படுக்கைக்கு எதிரில் இருந்த டி.வி.க்கு அருகில் கேபிள் இணைப்புக்கான பிளக் பாயிண்டில் இருந்து இந்த சிவப்பு லைட் எரிவதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து வெளியில் சென்று ஸ்குரூடிரைவர் வாங்கி வந்து அந்த பிளக் போர்டை கழட்டி பார்த்தனர். அப்போது அதன் உள்ளே சிறிய அளவிலான ரகசிய கேமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்த தெரியவந்தது.

அது இயங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோடி இதனை வீடியோவாக பதிவு செய்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினர்.

ஆனால் அவர்கள் இதனை கண்டு கொள்ளாததால் தங்கள் வீடுகளுக்கு சென்று நடந்ததை உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர். அப்போது மேலும் 3 அறைகளில் இது போன்று கேமிரா வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது.

தேங்காய்த்திட்டு மற்றும் அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேர் அங்கு வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் 2 பேர்தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து விடுதியின் உரிமையாளர் இளைய ஆழ்வார், ஓட்டல் பொறுப்பாளர் இருதயராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் புதுச்சேரி ஓட்டல்களில் தங்குகின்ற சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com