யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த வாலிபர்: ரவுடி வீட்டில் வீசி பரிசோதனை

வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டல்.போலீசார் வெடிமருத்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த வாலிபர்: ரவுடி வீட்டில் வீசி பரிசோதனை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பொறையூர்பேட் புதுநகரை சேர்ந்தவர் குருபஞ்சராவ். இவரது மகன் யோகேஷ் என்ற யோகரத்தினம் (வயது 21).

இவர் மீது கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

சில வாரங்களுக்கு முன், கிராத்திற்கு செல்லும் சாலையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த யோகரத்தினத்தை நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யோகரத்தினம் பட்டாசு வாங்கி வந்து யூடியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். அதனை தனது எதிரி ரவுடி முகேஷ், வீட்டின் சுவற்றில் வீசி வெடிக்க செய்து பரிசோதித்தார். பின்னர் தலைமறைவானார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் யோகரத்தினத்தை தேடி வந்தனர். பொறையூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த யோகரத்தினத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

யோகரத்தினத்திடம் இருந்து வெடிமருந்து, நூல் உருண்டை, கூழாங்கல், செல்போன் உட்பட பொருட்களை பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். யோகரத்தினம் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com