

புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களை வரவேற்க சட்டசபை எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வான சிவா மங்கள இசைக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வர காலதாமதமானது. அப்போது சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் அவர்களிடம் கொடுங்கள் நானும் வாசித்து பார்க்கிறேன் என்று கூறி நாதஸ்வரத்தை வாங்கி வாசித்து பார்த்தார். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள், விழாவுக்கு வந்தவர்கள் பாராட்டி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.