ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற டிரைவர்களுக்கு அபராதம்

ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர்.
ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற டிரைவர்களுக்கு அபராதம்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ புஸ்சி வீதியில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ், ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

புஸ்சி வீதி-தூய்மா வீதி சந்திப்பில் பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சோனாம்பாளையம் சந்திப்பிலும் சோதனை நடத்தினர்.

அப்போது ஆட்டோவில் 5 மாணவர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதை தாண்டி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 200 வீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.

ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர். இதுபோல் நடந்த சோதனையில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com