யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை- கவர்னர் தமிழிசை உருக்கம்

யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை- கவர்னர் தமிழிசை உருக்கம்
Published on

புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. மணக்குள விநாயகரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள். இந்த கோவிலுக்கு 1996ல் தொழிலதிபர் ஒருவர் யானையை பரிசாக அளித்தார். 5 வயதான பெண் யானைக்கு லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். ஆனால் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது.

இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பை பெற்றது. கோவில் வாசலில் நிற்கும் யானை லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகு போட்டோ எடுத்துக்கொள்வது, ஆசி பெறுவதும் வழக்கம். யானை லட்சுமிக்கு ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குதான் இரவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும். வழக்கம்போல் நேற்று இரவும் யானை லட்சுமி கொட்டிலில் ஓய்வெடுத்தது.

இன்று காலை 6.15 மணியளவில் நடைபயிற்சிக்கு பாகன் அழைத்துச்சென்றார். கல்வேபள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது.

இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது.

அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

பின்னர் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் இருந்து கால்நடைத்துறை டாக்டர்கள் வந்து யானை லட்சுமியை உடற்கூராய் செய்கிறார்கள். அதன்பின்னர் யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிழை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி. யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com