திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர்.
திருநள்ளாறு  சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

காரைக்கால்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

வருகிற 20.12.23 அன்று மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெறவுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர். அதேபோல் கோவில் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்ததால் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு பணியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com