மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தவளக்குப்பம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு அதனை தடுக்க முயன்ற தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு அதனை தடுக்க முயன்ற தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன்(வயது46). இவர் தவளக்குப்பம்-கடலூர் மெயின் ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரவீன்குமார் (22). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

பிரவீன்குமாரும், பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் ரோஜா நகரை சேர்ந்த விஸ்வா ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் பிரவீன்குமார் கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பூரணாங்குப்பம்-கடலூர் ரோடு சந்திப்பில் வந்த போது அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் பிரவீன்குமார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் உள்பட 3 பேரும் பிரவீன்குமாரை தாக்கினர். இந்த தாக்குதலில் பிரவீன்குமாருக்கு நெற்றி மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்த பிரவீன்குமாரின் தாய் அஞ்சாலாட்சி விரைந்து வந்து பிரவீன்குமாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.

பின்னர் இதுதொடர்பாக நேற்று காலை தவளக்குப்பம் போலீசில் பிரவீன்குமார் புகார் செய்தார். பின்னர் பிரவீன்குமார் வீடு திரும்பினார். போலீசில் புகார் தெரிவித்ததால் ஆவேசமடைந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரின் வீட்டுக்கு வந்தனர். இதனால் பயந்து போன பிரவீன்குமார் வீட்டின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

ஆனாலும் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று எங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கிறாயா? என்று கூறியபடி அரிவாளால் பிரவீன்குமாரை வெட்டினர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன்குமாரின் தந்தை குப்பனை அவர்கள் ஜல்லி கரண்டியால் வெட்டினர்.

மேலும் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மினிவேன் ஆகியவற்றை தடியால் அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு பிரவீன்குமாரையும், அவரது தந்தை குப்பனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரவீன்குமார் மற்றும் அவரது தந்தை குப்பன் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து குப்பன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த், ராகுல்காந்தி, விஸ்வா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com