புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு- குழந்தைகளை பள்ளிக்கு குதிரையில் அழைத்து வந்த தந்தை

குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன.
மாணவர்களை பள்ளிக்கு குதிரையில் அழைத்து வந்த தந்தை.
மாணவர்களை பள்ளிக்கு குதிரையில் அழைத்து வந்த தந்தை.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

புதுவை லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த நேரு ஜிப்மரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹனாஅமிழ்தினி (6). இவர் பாக்குமுடையான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். தனது மகன் ஹனியல் யாழ் இன்பனை(4) இதே பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் தொடங்கின.

தனது குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார். ரூ.5 ஆயிரத்துக்கு வாடகைக்கு குதிரையை பெற்ற நேரு, தனது குழந்தைகளை அதில் ஏற்றி வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்றார். இதை வீதியில் மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

இதனை பள்ளிக்கு வந்த பிற குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அவர்களையும் குதிரையில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துச் சென்று பின் பள்ளியில் இறக்கிவிட்டார். பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர் பலரும் இதனை ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்தனர்.

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை நேரு கூறும்போது, புதுவையில் அரசு பள்ளியில் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. தரமான கல்வி வழங்கப்படுகிறது. பெற்றோர் அனைவரும் அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க குதிரையை வாடகைக்கு எடுத்து என் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார்.

குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன. பொம்மலாட்ட கலைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியோடு குழந்தைகளை வரவேற்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com