

புதுச்சேரி:
ஏம்பலம் பாலமுருகன் நகரில் 10-வருடங்களுக்கு முன்னர் ஜல்லி போடப்ப ட்டது. மேற்கொண்டு அதன் மேல் தார் போடாமல் விட்டுவிட்டனர். இதனால் தொடர் மழையினாலும், போக்குவரத்தாலும் ஜல்லி பெயர்ந்து விட்டது. இது குறித்த பலமுறை தொகுதி எம்.எல்.ஏ.விடம் புகார் அளிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏம்பலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, மங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நேரில் சென்று, விரைவில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஏம்பலம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.