நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்: மக்கள் பிரதிநிதியாவதே எனது உள்ளார்ந்த விருப்பம்- கவர்னர் தமிழிசை

தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும்.
நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்: மக்கள் பிரதிநிதியாவதே எனது உள்ளார்ந்த விருப்பம்- கவர்னர் தமிழிசை
Published on

புதுச்சேரி:

புதுவை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

இதனையொட்டி தனது சாதனை புத்தகத்தை கவர்னர் தமிழிசை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல்வாதியாக இருந்து கவர்னராக வந்ததால், எதிர்கருத்துக்கும் பதில் தருவது வழக்கம். என்னுடையது சுமூகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே என்னை உயர்த்திக் கொண்டேன்.

தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.

நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

சமீபத்தில் சட்டப்பேரவை கோப்பு தொடர்பாக சபா நாயகர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அரசியலில் 25 ஆண்டுகளை செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்து தான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை.

எந்த கோப்பிலும் சுய லாபத்தை பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கவர்னர் அலுவலகம் இயங்குகிறது.

மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப் பேரவை கட்டுமான கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம். செலவினம் அதிகளவில் உள்ளது.

நாடாளுமன்றக்கட்டிடம், தெலுங்கானா சட்டசபை கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும் போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும், ஆடம்பரமாக செலவிடப்பட்டு விட கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

இது நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளிடம் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணி யாற்றி கொண்டிருக்கிறேன்.

என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம்தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தா நான். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுவையில் போட்டியிடுவது பற்றி நான் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள்.

இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண்.அதனால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுவையை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையா ளத்தை தரவேண்டாம். அது மனவலியை தருகிறது. வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.

அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை. ஆனால் ஒத்துழைப்பு போதிய அளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன். நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com